Total Pageviews

Thursday, August 24, 2017

தலைக்கவசம் உயிர் கவசம் !

தலைக்கவசம் உயிர் கவசம் !


தலைக்கவசம் போடாததால, தலைல அடிப்பட்டு இறந்த ஒரு சொந்தமோ, ஒரு நட்போ, அக்கம் பக்க உறவினரையோ நாம நிச்சயம் கடந்திருப்போம்
இருசக்கர வாகனங்களில் செல்வோர் [ஹெல்மெட்] தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்துதான் இந்த அதிரடி நடவடிக்கை.

விபத்துகளின்போது உயிர் காக்கும் கட்டாய ஹெல்மெட் தலைக்கவசம் விதி வரவேற்கப்பட்டாலும், அதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான்..! அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதுமிகவும் வருத்தத்துக்குரியது.! உலகளாவிய அளவில் இந்தியாவில் தான் அதிகவிபத்துக்கள் நடப்பதாக புள்ளியியல் விவரம் தெரிவிக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக நடை பெறுவதாகவும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு  சக்கர வாகனம்  ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது தான் தற்போதைய உண்மைநிலவரம்.

தலைக்கவசம் அணிவது என்னமோ காவல் அதிகாரியின் அபராத்திற்க்கு பயந்து தான் என்ற எண்ணம்  படித்தவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. போக்குவரத்து காவலர் இருக்கும் இடத்தில் அணிந்துக் கொள்வதும், பின்பு கழற்றி பெட்ரோல் டாங்க் மீது வைக்கும் பழக்கம்  நம்மில் பலருக்கு இருக்கிறது. தலைக்கவசம் நம் உயிரை காப்பாற்றத்தானே தவிர போக்குவரத்துக் காவலர் உயிரைக்  காப்பாற்ற  அல்ல. அல்லது  பெட்ரோல் டாங்க்கை காப்பதற்க்கு அல்ல! நாம் நமக்காகத்தானே மருந்து சாப்பிடுகிறோம். மருத்துவருக்காக அல்லவே.! இதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற சட்டம் அமலாக்கப்பட்ட ஆரம்பத்தில், மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டது. அபராதம் கூடவிதித்தார்கள். நாளடைவில் அச்சட்டம் நீர்த்து போய் விட்டது. யாரும் பின்பற்றவில்லை.  யாரையும் பிடிப்பதும் இல்லை. ! தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. எப்படிப்பட்டவிபத்தாக இருந்தாலும் , சிறு சிறு காயங்கள், எலும்பு முறிவுகள் என்று உண்டாக்குமேதவிர உயிருக்கு ஆபத்து ஏற்படாது. உயிர் பிழைத்துக் கொள்ளலாம். சமீப காலமாக நம்தமிழ்நாட்டில் அதிக மூளை சாவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைக்கவசம்அணிவதினால் இதை தவிர்க்கலாமே.!


தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை சமீபத்தில்  உணர்த்திய  என்அனுபவத்தை இங்கே பகிரலாமென நினைக்கிறேன். இக்கட்டுரையை எழுதத் தூண்டியதும் அந்தஅனுபவமே.!

சில வாரங்களுக்கு முன் என் நண்பர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர் திசையில்,  தவறாக ஒரு மூன்றுசக்கர மோட்டார் பொருத்திய மிதிவண்டி திடீரென்று வந்ததால் அதன் மீது மோதி விடக்கூடாது என்ற  எண்ணத்தில் சாலையின் ஓரமாக செல்ல எத்தனித்துள்ளார்கள். ஆனால்வண்டி கட்டுப்பாட்டை இழந்து பக்கத்திலுள்ள நடை மேடையில் இடித்து, மின் கம்பத்தில்மோதியுள்ளது. தலை மின் கம்பத்தில் மோதி, பிறகு கிழே விழுந்துள்ளார்கள். தலைக்கவசம் அணியும் பழக்கம் உள்ளதால் எப்போதுமே தலைக்கவசத்துடன் தான்செல்வார்கள்.  ஆதலால் அன்று உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாமல் போனது.  எலும்பு முறிவு ஏற்பட்டு , அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக உள்ளார்கள்.அன்று அவர்களின்உயிரைக் காப்பாற்றியது தலைக்கவசம் தான்..!  ‘

நம்மில் பல  பேருக்கு  நம்பிக்கை இருக்கிறது.,  நான் நன்றாக ஓட்டுவேன்.  , சாலை விதிகளை சரியாக பின்பற்றுகிறேன் என்று.! ஆனால்  நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் , எதிர் திசையில் வருபவர்கள் சரியாக இருக்கிறார்களா என்று நமக்கு தெரியாது.  இன்னும் சில பேர் மது அருந்தி விட்டுஓட்டுவார்கள். இளைஞர்கள் அவசரமாகவும், வேகமாகவும் ஓட்டும் போது சாலை விதிகளைமதிப்பதில்லை. மருத்துவமனைகளில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக வருவோரில் பலர்சாலை விபத்தின் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதிலும்இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள இளைஞர்களே என்பது மிகவும்வருத்தத்துக்குரிய செய்தியாக இருக்கிறது.!   இரவு நேரங்களில்கேட்கவே வேண்டாம். யாருமே கவனத்துடன் ஓட்டுவதில்லை. ஒருவழிப் பாதையைக்  கூடசரியாகப் பின்பற்றுவதில்லை.!

அடுத்து ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், சாலைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை . மின்சார  வாரியம், குடிநீர் வாரியம், கழிவு நீரகற்று  வாரியம் என அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள் பழுதுப் பார்க்கிறோமென்று அங்கெங்கேகுழித் தோண்டி விடுகிறார்கள். அதை சரியாக மூடுவதுமில்லை. அதிலும் மழைக்காலம்வந்து விட்டால் நீர் தேங்கி வழுக்கி விடும் அபாயமும் உள்ளது. எடைக் குறைவாக உள்ளவாகனங்கள் , அந்த சேற்றில் போகும்போது வழுக்கி விழ ஏதுவாகிறது. விபத்து என்பது எதிர்பாரா விதமாக நடப்பது தானே.! அது எந்த நேரத்தில், எந்த வடிவத்தில் , எப்படிவேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கை விசயத்தில் முதலில் இருப்பது தலைக்கவசம் தான்.!

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தையும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் ஒருமிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்காலத்தின் கட்டாயமாகிறது. இதற்கான புரிதலை நாம் உண்டாக்க வேண்டும். இந்த விடயத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படுவதும், பின்பு செல்லரித்து போவதுமாக இருந்தால்மக்களுக்கு எப்படி சட்டத்தின் மீது ஒரு மதிப்பு உண்டாகும் .?   சட்டங்கள் இயற்ற மட்டும் தான். பின்பற்ற அல்ல என்ற மனப்பான்மை தானே தோன்றும்.!  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்தி விட்டு ஓட்டுவது, சாலை விதிகளை மதியாமல் இருப்பது போன்றவற்றிற்கு கடுமையான தண்டனை, அபராதம் விதித்தல்என்பதை அமல்படுத்த வேண்டும். மக்களின் நன்மைக்காக சிலவற்றில் சமரசம் செய்துக்கொள்ளாமல் கட்டாயமாக்கினால் தான் அதன் முழு பயனையும் அடைய முடியும்.!   சாலை விதிகளை பற்றிய  அறிவை  நாம் மாணவர்களாக இருக்கும்போதே, பள்ளிப்பருவத்திலேயே உண்டாக்க  வேண்டும். சிறு  வயதிலேயே ஒருசரியான புரிதலை உண்டாக்கி விட்டோமானால், அது மனதில் நன்கு பதிந்து  பலதவறுகளையும், அதன் மூலம் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்கஏதுவாகயிருக்கும்.

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம்.!

சாலை  விதிகளை மதிப்போம்.!

விபத்துக்களைத் தவிர்ப்போம்.!

நன்றி! சிறகுகள்-ஆச்சாரி!

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...