Total Pageviews

Monday, April 2, 2012

தமிழகத்தில் மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும்

தமிழகத்தில் மின்சாரம் குறைவாக இருக்கிறது என்பது பொய்!" என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம். இவர், ஹரியானா மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்து, பல முன்னெடுப்புகளை எடுத்துச் சென்றவர்.

"
மின்சாரம் என்பதும் ஒரு பண்டமாற்றப் பொருள் போன்றதுதான். உற்பத்தி செய்தால் மட்டும் போதுமா? அதை எப்படிச் சரியாக விநியோகித்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் தெரிய வேண்டும். எந்த அடிப்படையில் இவர்களுக்கு இன்னும் பல மெகாவாட் மின்சாரம் தேவை என்று கோரிக்கை வைக்கிறார்கள்?

16,000
மெகாவாட் மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான தேவை என்ன? அரசுத் துறையில் இருந்து இதுவரை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா? இல்லை.

இப்போது இருக்கும் மின்வெட்டைச் சமாளிப்பதற்கு மேலும் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது சரியான தீர்வாக அமையாது. அடிப்படையாகச் சில விஷயங்களைச் சீர்திருத்தினால் ஓரளவு சமாளிக்க முடியும்" என்றவர், அரசுக்கு முன்வைக்கும் 10 யோசனைகள்:

1.
மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் வேறு வேறு தேவைகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் அதிக மின்சாரம் தேவைப்படுவது தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும்தான்.

தொழில் துறையை எடுத்துக் கொண்டால், ஒரு ஷிப்ட், இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் மற்றும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய தொழிற்சாலைகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் சுமார் 70 சதவிகித தொழிற்சாலைகள் ஒரே ஷிப்ட்டில் இயங்குபவைதான். ஆனால், மூன்று ஷிப்ட்டில் இயங்குபவையாகக் கணக்கு காட்டுகின்றன. இதை முதலில் அரசு கெடுபிடியுடன் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும்.

2.
மின் விநியோகம் தேவைப்படுகிற தொழிற்சாலைகள், வீடுகள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் ஒரே வரிசையில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தவிர்க்கலாம். 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிற வீடுகள், மருத்துவமனைகள் போன்றவற்றை ஒரே வரிசையிலும், மற்ற துறைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரம் வழங்குகிற வகையிலும் வரிசைப்படுத்தி வைக்கலாம்.

3. 'தேவையின் அடிப்படையில் ஆற்றல் மேலாண்மை' என்ற கருத்தின்படி நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் விநியோக நடைமுறை என்பது 'ஆர்பிட்ரரி ரேஷனிங்' எனும் மனம்போன போக்கில் விநியோகிக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. இந்தத் துறைக்கு இவ்வளவு, அந்தத் துறைக்கு இவ்வளவு என்று சொல்லி தேவையைப் பார்த்து மின் விநியோகம் செயல்படுத்தப் படுவதில்லை. கேட்கும் நிறுவனங்களுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.

4.
தமிழகத்தில் எல்லா லைனிலும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரம் தேவைப்படாத நேரங்களில் அந்த லைனில் உள்ள மின் விநியோகத்தை நிறுத்தி வைக்கலாம்.

5. மானியங்களை நிறுத்த வேண்டும். அல்லது, அதைக் குறைக்க வேண்டும். இதுதான் இன்று தமிழக மின்சார வாரியத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. இலவச மின்சாரம், குறைந்த விலையில் மின்சாரம் என்பது எல்லாம் யாருக்காகக் கொடுக்கப்பட்டது? விவசாயி களுக்கும் ஏழை மக்களுக்கும் தானே? ஆனால், இந்த மானியங்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன!

6.
கடந்த 2003-ல் ஏற்படுத்தப்பட்ட மின்சாரச் சட்டம் முழுவதுமாக செயல் படுத்தப்படவில்லை. அந்தச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிற முறைப்படி எந்தெந்த துறைக்கு எத்தனை சதவிகித மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிடப் படவில்லை.

7.
பரவலான முறையில் மின் உற்பத்தி செய்தல். அதாவது, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீர், அனல் என்ற மரபுசார்ந்த வழிகளை மட்டும் யோசிக்காமல், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதையும் சிந்திக்க வேண்டும். இன்றைய தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்ததும், 'சூரிய சக்தி மூலம் மின்சாரம்' என்று சொன்னார். இதோ ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. அதில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது இப்போது வரை தெரியவில்லை.

8.
மின் கடத்தப்படுகிற போது ஏற்படும் மின் இழப்பைக் குறைக்க வேண்டும். 'Transmission & Distribution Loss' என்பது மிகவும் தவறான கருத்து. 'டிரான்ஸ்மிஷன்'னின்போது ஒன்று அல்லது இரண்டு சதவிகித மின் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அது ஹை-வோல்டேஜ் ஆக இருப்பதால் அதை யாரும் திருடவும் முடியாது. மாறாக, 'Distribution & Delivery Loss' என்பதுதான் சரியாக இருக்கும். விநியோகம் மற்றும் இறுதிப் பயனாளியான நுகர்வோர்க்கு மின் வழங்குதல் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்யவும் இன்று தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

9 '
இந்தப் பொருள் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்' என்று குறிப்பிடும் 'Energy Efficiency Labelling' முறை கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பொருட்களைப் பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

10.
ஒவ்வொருவர் வீட்டிலும் 'ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்த அறிவுறுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு நுகர்வோர்க்கும் தான் எத்தனை யூனிட் மின்சாரம் பயன் படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதுடன், அதைச் சிக்கனமாகவும் பயன் படுத்தத் தொடங்குவர்.

இந்தப் பத்து விஷயங்களைச் செய்தால் இப்போதிருக்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்!" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், தேவசகாயம்!

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...